சொத்து பிரித்து தராத மாமனாரை அடித்து கொன்ற மருமகன் கைது
பம்மல்: பம்மல் அருகே சொத்து பிரித்து தராத ஆத்திரத்தில், வீட்டிற்கு வந்த மாமனாரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலையை சேர்ந்தவர் ராஜா, 45. இவரது மனைவி சரண்யா. பம்மலை அடுத்த பொழிச்சலுார், குமரன் நகர், நேரு தெருவில், ஒரு வருடமாக குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் தங்கி, ஹோட்டலில் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மாமனார் அழகர்சாமி, 55. தேனி மாவட்டம், கல்லுப்பட்டி, வள்ளியம்மை தெருவில் வசித்து வந்தார். ஊரில் உள்ள சொத்துகளை விற்ற அழகர்சாமி, ராஜா குடும்பத்திற்கு பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை, மகள் வீட்டிற்கு வந்த அழகர்சாமியிடம், சொத்து தொடர்பாக ராஜா தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த ராஜா, வீட்டின் வெளியே இருந்த இரும்பு கம்பியை எடுத்து, மாமனார் அழகர்சாமியின் தலையில் பலமுறை அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அழகர்சாமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் குறித்து, சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிந்து, ராஜாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.