போதையில் கார் ஓட்டிய மாணவர் கைது எலும்பு முறிந்து போலீஸ்காரர் அட்மிட்
பாண்டி பஜார்:விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் கணேசன், 32; போலீஸ்காரர். அண்ணா சாலையில் உள்ள விடுதியில் தங்கி, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு, நந்தனத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில், பாதுகபாப்பு பணியில் ஈடுபட்டார்.பின், பணி முடிந்து தன், ஹீரோ பேஷன் ப்ரோ பைக்கில் வீடு திரும்பினார். அண்ணா சாலையில், தேனாம்பேட்டை அருகே சென்றபோது, முன்புறம் சென்ற கியா கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவர் மீது மோதியது. அந்த கார் ஓட்டுநர், வானகத்தை வேகமாக எடுத்தபோது, பின்னால் பைக்கில் வந்த கணேசன் மீது மோதியது. கணேசன் இடது பக்க காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.பாண்டி பஜார் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து, காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ கல்லுாரி மாணவன் மணிகண்டனை, 21 கைது செய்து விசாரித்து வருகின்றனர்.நந்தனத்தில் நடந்த இசை நிகழ்ச்சியை முடித்து விட்டு, மது போதையில் காரை ஓட்டி வந்தது விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது.