அமைந்தகரை பஸ் நிறுத்தத்தை ஆக்கிரமிக்கும் வாகனங்களால் அவதி
அமைந்தகரை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் தனியார் வாகனங்களால், பயணியர் கடும் அவதியடைகின்றனர்.அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பூந்தமல்லி நெடுஞ்சாலையில், அமைந்தகரை பகுதியில், ஆம்பா மால் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த நிறுத்தத்தில் 'தடம் எண்கள்: 29கே, 15ஜி, 15பி, 27பி' உள்ளிட்ட மாநகர பேருந்துகள் நின்று செல்லும். இங்கிருந்து நாளொன்றுக்கு நுாற்றுக்கணக்கான பயணியர் கீழ்ப்பாக்கம், எழும்பூர், புரசைவாக்கம், சென்ட்ரல், பிராட்வே உள்ளிட்ட இடங்களுக்கு பயணிக்கின்றனர்.இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்து, தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், மாநகர பேருந்துகள் போக்குவரத்து நிறைந்த சாலையின் நடுவே நின்று செல்வதால், பயணியர் கடும் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.