சென்னை: தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, நான்காவது புதிய ரயில் பாதை அமைக்க ரயில்வே வாரியம், 713 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து, திட்டப்பணிகள் வேகமெடுக்கும் என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சென்னை - செங்கல்பட்டு ரயில் பாதை தென் மாவட்டங்களுக்கு செல்ல பிரதான பாதையாக இருக்கிறது. இவற்றில், 50க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள், 250க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரையிலான புறநகர் பகுதிகளில் குடியிருப்புகள், தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது, மூன்று பாதைகள் உள்ளன. கூடுதல் ரயில் சேவை துவங்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர். போதிய ரயில் பாதை இல்லாததால், ரயில் சேவை அதிகரிப்பதில் சிக்கல் இருந்து வருகிறது. எனவே, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே நான்காவது புதிய ரயில் பாதை அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, கடந்த பிப்ரவரி மாதத்தில் ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே அனுப்பியது. தற்போது, இந்த திட்டத்தை செயல்படுத்த ரயில்வே வாரியம் 713 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: பொதுமக்களின் தேவையை கருத்தில் வைத்து, பல்வேறு மாநில அரசுகள் ரயில்வேயுடன் இணைந்து திட்டப்பணிகளை மேற்கொள்கின்றன. அந்த வகையில், தமிழக அரசின் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்கு வரத்து ஆணையம், இந்த திட்டப்பணியை மேற்கொள்ள உள்ளது. இதற்கு டி.பி.ஆர்., எனும் விரிவான திட்ட அறிக்கைக்கு, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது 713 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால், இந்த திட்டப்பணிகள் வேகமெடுக்கும். ஏற்கனவே, போதிய நிலம் கையகப்படுத்துவது போன்ற பணிகளை துவக்கி உள்ளோம். இந்த புதிய பாதை பயன்பாட்டிற்கு வரும்போது, கூடுதல் ரயில்களை இயக்க முடியும். அதுபோல், ரயில்களின் வேகமும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.