30,000 இலவச மனை பட்டா வழங்க இலக்கு? செங்கல்பட்டு அதிகாரிகளுக்கு நெருக்கடி!
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர் உட்பட எட்டு தாலுகாக்கள் உள்ளன.இப்பகுதிகளில், ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு இடங்களில், ஆயிரக்கணக்கானோர் வீடு கட்டி வசிக்கின்றனர். இந்த இடங்களுக்கு பட்டா கிடையாது.இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின், பிப்., 12ம் தேதி, கள ஆய்வு செய்ய வருகிறார்.அப்போது, மாவட்டத்தின் எட்டு தாலுகாக்களில் 30,000க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான பணிகளை மேற்கொள்ளும்படி, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இதற்கான பணிகளில் வருவாய்த் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறைந்த நாட்களுக்குள், பெல்ட் ஏரியா, ஆட்சேபனைக்குரிய இடம் ஆகியவற்றை அடையாளம் கண்டு, அவற்றை வருவாய் ஆவணங்களில் மாற்றுவதால், பணிச்சுமையுடன், பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக, அத்துறை அதிகாரிகள் புலம்புகின்றனர்.வருவாய் துறையினர் கூறியதாவது:சென்னையிலிருந்து 32 கி.மீ., துாரத்திற்கு 'பெல்ட்' ஏரியாவாக, பட்டா வழங்க தடை செய்யப்பட்ட பகுதியாக, 1962ம் ஆண்டு, அரசு உத்தரவிட்டது.இந்த பெல்ட் ஏரியாவில், செங்கல்பட்டு தாலுகாவில் - 15; திருப்போரூர் - 29; வண்டலுார் - 36; தாம்பரம் - 20 கிராமங்கள் உள்ளன.பல்லாவரம் தாலுகாவில் ஜமீன் பல்லாவரம்,திரிசூலம், கவுல்பஜார் உட்பட பல பகுதிகள் வரையறுக்கப்பட்டு உள்ளன.இப்பகுதிகளில், ஆட்சேபனைக்குரிய புறம்போக்குகளில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக பலரும் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, பட்டா வழங்க முடியாத சூழல் இருந்தது.தற்போது, பெல்ட் ஏரியா என்ற பகுதியின் தடையை நீக்கி, இலவச வீட்டுமனை பட்டா வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான பணிகளை கவனிக்கும்படியும், உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.அதாவது, 40 ஆண்டுகளாக ஒருவர், அதே பகுதியில் தான் வசிக்கிறாரா என்பதற்கான ஆவணங்களை தயார் செய்ய வேண்டும்.தவிர, மேய்க்கால் புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வழங்குவதாக இருந்தால், வழங்கப்படும் இடத்தின் அளவுக்கு ஏற்ப, மாவட்டத்தின் வேறு பகுதியில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை, வருவாய் ஆவணங்களில் சேர்க்க வேண்டும்.இப்படியாக, வருவாய் ஆவணங்களை தயாரிப்பதில் ஏராளமான சிக்கல்கள் உள்ளன. இதனால், பணிச்சுமை ஏற்படுகிறது. வழக்கமான பணிகளையும் கவனிக்க முடிவதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.நடவடிக்கைமாவட்டத்தில், முதல்வர் ஆய்வுக்கு வரும்போது, இலவச வீட்டுமனை பட்டா மற்றும் அனைத்து துறைகள் வாயிலாக, பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளோம். தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு, இலவச வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.- ச.அருண்ராஜ்,கலெக்டர், செங்கல்பட்டு.