தெரு பெயர் பலகைகள் மாயம் திருவொற்றியூரில் தொடருது அவதி
திருவொற்றியூர்:சென்னை மாநகராட்சி முழுதும், ஒளிரும் தெரு பெயர் பலகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த தெரு பெயர் பலகை ஒன்று அமைக்க, 22,000 முதல் 27,000 ரூபாய் வரை செலவாகிறது.திருவொற்றியூர் மண்டலத்தில், தற்போது கவுன்சிலர்களின் பெயர்களும் தனிப்பலகைகளில் இடம் பெறுவதால், கூடுதலாக 3,000 முதல் 5,000 ரூபாய் வரை செலவு ஏற்படுவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் திருவொற்றியூர், தேரடி, கணக்கர் தெருவில் வைக்கப்பட்டுள்ள இரண்டு ஒளிரும் தெரு பெயர் பலகை முற்றிலுமாக பெயர்த்தெடுக்கப்பட்டு உள்ளது.இதனால் தெரு பெயர், விலாசம் தெரியாமல் பலரும் குழம்பி தவிக்க வேண்டியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, தெருபெயர் பலகைகள் மீண்டும் பொருத்திட, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.