பொருட்காட்சி 90,000 பேர் கண்டுகளிப்பு
சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், தீவுத்திடலில் நடந்து வரும் 49வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி, கடந்த 6ம் தேதி துவங்கியது. பொருட்காட்சியில், 30க்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு விளையாட்டு தளங்களும்; 110 சிறிய கடைகளும்; 30 தனியார் அரங்குகளும் இடம்பெற்றுள்ளன.பணிகள் முடிந்து, கடந்த 10ம் தேதி முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். பொங்கல் விடுமுறையையொட்டி, பொதுமக்கள் வருகை அதிகரித்தது. நேற்று முன்தினம் வரை 90,812 பேர் பொருட்காட்சியைப் பார்வையிட்டுள்ளனர். நேற்று முன்தினம் காணும் பொங்கல் விடுமுறையையொட்டி, 36,279 பேர் பொருட்காட்சிக்கு வருகை புரிந்து பார்வையிட்டுள்ளனர். மார்ச் இறுதி வரை பொருட்காட்சி நடக்கிறது.