குட்கா தராததால் கடைக்கு தீ வைத்தவர் கைது
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன், 35. இவர், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.கடந்த 2ம் தேதி மாலை, அதே பகுதியைச் சேர்ந்த தீனதயாளன், 22, என்பவர், கடைக்கு வந்து, 'குட்கா' புகையிலை பொருட்களை கேட்டுள்ளார். போதை வஸ்துக்கள் இங்கு விற்பனை செய்யப்படுவதில்லை என, சீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும், கடையில் ஏற்கனவே உள்ள கடன் பாக்கியையும் கேட்டுள்ளார்.இதனால், ஆத்திரம் அடைந்த தீனதயாளன், 'கடையை தீ வைத்து எரித்து கொளுத்திவிடுவேன்' எனக்கூறி மிரட்டி சென்றார்.இந்த நிலையில், நள்ளிரவு சீனிவாசனின் கடை தீப்பற்றி எரிந்துள்ளது. கும்மிடிப்பூண்டி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.அதற்குள் கடையில் இருந்த, 1.10 லட்சம் ரூபாய், ஜெராக்ஸ் மிஷின், பிரின்டர், பிரிஜ், இன்வெர்ட்டர், 'டிவி' மளிகை பொருட்கள் என, 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பொருட்கள் தீக்கிரையாயின.தீனதயாளனை கைது செய்ய வேண்டும் என, பகுதிவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விசாரணையில், தீனதயாளன் கடைக்கு தீ வைத்தது உறுதியானதை அடுத்து, பாதிரிவேடு போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.