உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்கியவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சோகம்

டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்கியவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சோகம்

திருவாலங்காடு, திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் காவேரிராஜபுரம் கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. மின்வெட்டுக்கு காரணம், டிரான்ஸ்பார்மரில் இருந்த 'பியூஸ்' எகிறியது என தெரியவந்தது.இதையடுத்து, காவேரிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாகேஷ், 47, சோபன்பாபு, 47, ஜானகிராமன், 43, பாபு, 42, இந்திரசேனன், 41, உள்ளிட்டோர், அதே கிராமத்தில் அருந்ததியர் காலனியில் வசிக்கும் முனிரத்தினம், 40, என்பவரை அழைத்து வந்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.டிரான்ஸ்பார்மரில் பியூஸ் போட மின்கம்பத்தில் ஏறிய போது, மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட முனிரத்தினம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள், காவேரிராஜபுரம் பிரதான சாலையில், இரவு 11:00 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, உயிரிழப்புக்கு காரணமான ஐந்து பேரையும் கைது செய்ய வேண்டும். அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். கனகம்மாசத்திரம் போலீசார் சமரசம் செய்து சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். அப்பகுதியில் அசம்பாவிதம் நிகழாமல் இருப்பதற்காக, திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

பழுது நீக்க ஏறுவது குற்றம்

டிரான்ஸ்பார்மர், மின்கம்பம் உள்ளிட்டவற்றில் பழுது ஏற்பட்டால், உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின்சாரம் பாய்கிறதா, துண்டிக்கப்பட்டு உள்ளதா என்பது தெரியாது. தாங்களாகவே சரிசெய்யும் பணியில் பகுதிவாசிகள் ஈடுபடும் போது, விபத்தில் சிக்கி உயிரிழப்பு நிகழ வாய்ப்புள்ளது. அதேபோல், மின்வாரிய ஊழியர்களை தவிர்த்து, மற்றவர்கள் மின்கம்பம் மற்றும் டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்க ஏறுவது குற்றம். வரும் காலங்களில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.- மின்வாரிய பொறியாளர்,திருவள்ளூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி