சூரை மீன்பிடி துறைகம் வரும் 28ம் தேதி திறப்பு
திருவொற்றியூர், ''திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகம், வரும் 28 ம் தேதி திறக்க வாய்ப்புள்ளது,'' என, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார். கடந்த 1970ல் துவக்கப்பட்ட காசிமேடு மீன்பிடி துறைமுகம், விரிவாக்கம் செய்யப்பட்டு, 2,000 படகுகள் நிறுத்தும் வகையில் மேம்படுத்தப்படு உள்ளது. இருப்பினும், இடப்பற்றாக்குறை நிலவியது. இதற்கு தீர்வாக, 272 கோடி ரூபாயில், திருவொற்றியூரில் சூரை மீன்பிடி துறைமுகம் அமைக்குமு் பணிகள், 2019ல் துவங்கின. கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. மீன்பிடி துறைமுகத்தை திறக்க இரண்டு முறை ஏற்பாடுகள் நடந்தும், திறப்பு விழா ரத்தானது. இங்கு, அலைகளால் படகுகள் சேதமாகும் என்பதால், தென்கிழக்கு அலை தடுப்பு சுவரை, 330 அடி துாரம் நீட்டிக்க வேண்டும் என, மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து, நம் நாளிதழில், 'முதல்வர் வருகைக்காக காத்திருக்கும் சூரை மீன்பிடித்துறைமுகம்' என்ற தலைப்பில், நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் நேற்று, சூரை மீன்பிடி துறைமுகத்தில் ஆய்வு செய்தனர்.பின், அனிதா ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி : திருவொற்றியூர் சூரை மீன்பிடித்துறைமுகம் கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. வரும், 28 ம் தேதி திறக்கும் வகையில் ஏற்பாடுகள் நடக்கின்றன. முதல்வரிடம் பேசியபின், திறப்பு தேதி உறுதி செய்யப்படும்.சென்னை ஐ.ஐ.டி.,யால் ஆய்வு செய்யப்பட்டு, சாத்திய கூறுகள் இருந்தால் தென்கிழக்கு அலை தடுப்பு சுவர், 330 அடி துாரம் நீட்டிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், திருவொற்றியூர் எம்.எல்.ஏ., சங்கர், மண்டல குழு தலைவர் தனியரசு, மண்டல உதவி கமிஷனர் விஜயபாபு, செயற்பொறியாளர் பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.