உபரிநீர் கால்வாயை ஆக்கிரமித்திருந்த இரு கட்டடங்கள் இடித்து அகற்றம்
கீழ்க்கட்டளை:கீழ்க்கட்டளை ஏரி உபரி நீர் வெளியேறும் கால்வாயை ஆக்கிரமித்திருந்த இரு ஆக்கிரமிப்புகள் அகற்றம். பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையோரம் அமைந்துள்ள கீழ்க்கட்டளை ஏரியின் உபரி நீர் வெளியேறும் போக்கு கால்வாயில், 1,300 மீட்டர் நீளத்திற்கு, வெள்ளப் பாதிப்பை தவிர்க்கும் வகையில், துார்வாரி தடுப்பு சுவர் அமைக்கும் பணி, நீர்வளத்துறை சார்பில் நடந்து வருகிறது. இப்பணியின் போது, ஈச்சங்காடு சந்திப்பு அருகே அளவெடுத்த போது, வணிகப் பயன்பாட்டிற்கான இரு கட்டடங்கள், கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பது தெரிந்தது. அதனால், நேற்று காலை 9:00 மணிக்கு, பள்ளிக்கரணை போலீசார் உதவியுடன், அந்த இரு ஆக்கிரமிப்பு கட்டடங்களையும் நீர்வளத்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர். இதனால், கால்வாயின் அகலம், 10 மீட்டர் அதிகரிக்கும் என, நீர்வளத்துறை அதிகாரி தெரிவித்தார்.