திருவள்ளூர்: புழலில், வீட்டின் முன் கார் 'பார்க்கிங்' செய்ததை தட்டிக்கேட்ட முதியவரை அடித்து கொலை செய்த வழக்கில், இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னை புழல், சிவராஜ் தெருவைச் சேர்ந்தவர் பரதராமன், 61; தனியார் கடையில் மருந்தாளுனராக பணிபுரிந்து வந்தார். இவரது வீட்டின் முன், அதே தெருவைச் சேர்ந்த குமரவேல், 43; என்பவர், 2022, பிப்., 1ம் தேதி, காரை நிறுத்தியிருந்தார். இதுகுறித்து கேட்டபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் குமரவேல் மற்றும் அவரது உறவினர்கள், பரதராமனை தாக்கினர். பலத்த காயமடைந்த அவர், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பிப்., 4ம் தேதி உயிரிழந்தார். புழல் காவல் நிலைய போலீசார், குமரவேல், மனைவி கல்பனா, உறவினர்கள் அருணகிரி, பழனி, மலர், சங்கீதா ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை, பொன்னேரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் லாசர் வாதாடினார். விசாரணை முடிவில் நேற்று, நீதிபதி சிவகுமார், குமரவேல், 43, மற்றும் அவரது உறவினர் அருணகிரி, 64, ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், மற்றவர்களை வழக்கில் இருந்து விடுவித்தும் தீர்ப்பளித்தார்.