உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அக்காவின் கள்ளக்காதலுக்கு இடையூறு மாமா கொலை; மைத்துனருக்கு ஆயுள்

அக்காவின் கள்ளக்காதலுக்கு இடையூறு மாமா கொலை; மைத்துனருக்கு ஆயுள்

சென்னை :அக்காவின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமாவை கொலை செய்த வழக்கில், மைத்துனருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொடுங்கையூர் கட்டபொம்மன் நகரைச் சேர்ந்தவர் உதயகுமார், 38; பெயின்டர். இவர், எருக்கஞ்சேரி நேரு நகரைச் சேர்ந்த வசந்தி, 30, என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், செங்குன்றத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருடன், வசந்திக்கு பழக்கம் ஏற்பட்டு, கள்ளக் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தனர். இதை, உதயகுமார் கண்டித்தார். தங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்து வந்த உதயகுமாரை தீர்த்துக்கட்ட, இருவரும் முடிவு செய்தனர். வசந்தி, தன் தம்பி கார்த்திக், 30, உதவியை நாடினார். கடந்த, 2017 டிச.,21ல், கொடுங்கையூர் நேரு நகரில் உள்ள பாழடைந்த வீட்டுக்கு உதயகுமாரை அழைத்து சென்று, கத்தியால் குத்தி, கார்த்திக் கொலை செய்தார். கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து, கார்த்திக்கையும், உடந்தையாக இருந்ததாக வசந்தி, ரமேஷ் ஆகியோரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை 21வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஏ.பிரபாவதி முன் நடந்தது. போலீசார் தரப்பில், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் சுரேஷ் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, கார்த்திக் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி, அவருக்கு ஆயுள் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். வசந்தி, ரமேஷ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, அவர்கள் இருவரையும், நீதிபதி விடுவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை