சென்னை: மயிலாப்பூரில் துவங்கிய பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டியில், நகரின் பல்வேறு இடங்களில் இருந்து, 18 மகளிர் அணிகள் பங்கேற்றுள்ளன. லேடி சிவசாமி அய்யர் பள்ளி சார்பில், 29வது மஹாராஜா ஸ்ரீ விஜயராமா கஜபதி கோப்பைக்கான வாலிபால் போட்டி, மயிலாப்பூரில் நேற்று துவங்கியது. இதில், ஆவடி மற்றும் மாதவரம் அரசு பள்ளிகள், பிரசிடென்சி, வித்யோதயா, வேலம்மாள், கண்ணகி நகர் அரசு பள்ளி உள்ளிட்ட, 18 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. காலை துவங்கிய முதல் போட்டியை, சென்னை விநாயகா மிஷன் பல்கலையின் விளையாட்டுத் துறை இயக்குநர் ஓம்பிரகாஷ், சர்வதேச வாலிபால் வீரர் கலைவாணன், பள்ளியின் முன்னாள் மாணவியும் பால் பேட்மின்டன் வீராங்கனையுமான மகாலட்சுமி உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். முதல் நாளில் நடந்த லீக் ஆட்டங்கள் பரபரப்பாக நீடித்தன. இதில், வித்யோதயா அணி, 26 - 24, 26 - 24 என்ற செட் கணக்கில், கேவின் பள்ளியை வென்றது. அதேபோல், சி.எஸ்.ஐ., மெல்ரோசாபுரம் அணி, 23 - 25, 25 - 20, 15 - 10 என்ற செட் கணக்கில், மாதவரம் அரசு பள்ளியை வீழ்த்தியது. பெரம்பூர் மாநகராட்சி பள்ளி, 25 - 13, 25 - 14 என்ற புள்ளிக்கணக்கில், ஏ.ஜி.எஸ்., நிதி பள்ளியை வீழ்த்தியது. மேலும், லேடி சிவசாமி பள்ளி, ஆவடி அரசு பள்ளியை, 25 - 14, 25 - 15 என்ற நேர் 'செட்' கணக்கில் தோற்கடித்தது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.