புறநகரில் ஓடும் டப்பா பஸ்கள் கூரை வழியே நீர் கொட்டும் அவலம்
செங்குன்றம், சென்னை புறநகரான செங்குன்றம், சோழவரம்,காரனோடை, கும்மனுார், அலமாதி, மோரை மற்றும் ஞாயிறு சுற்றுவட்டாரத்தில் இயங்கும் மாநகர பேருந்துகள், பெரும்பாலும் ஓட்டை உடைசல்களாகவே உள்ளன.குறிப்பாக, செங்குன்றம் - விச்சூர் வரையிலான தடம் எண் '57இ' பேருந்து மோசமான நிலையில் உள்ளது. நேற்று பெய்த தொடர் மழைக்கு, இந்த பேருந்தின் உள்ளேயும் மழை பெய்தது. கூரை வழியே உட்புகுந்த மழைநீரால் பயணியர் இருக்கையில் அமர்ந்து பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.இருக்கைகள் அனைத்தும் நனைந்து, உட்கார முடியாத நிலை ஏற்பட்டது.இதுகுறித்து பயணியர் சிலர் கூறுகையில், 'சென்னை புறநகர்களான ஞாயிறு, மோரை, செங்குன்றம் முதல் சோழவரம் வரையிலான சாலைகள் படுமோசமாக உள்ளன. இந்நிலையில் மாநகர பேருந்துகளும், தகர டப்பாக்களாகவே உள்ளன.மழைக் காலத்தில் பேருந்தில் பயணிக்கும் போது, குடையுடன் தான் பயணிக்க முடியும். பயணியர் நலன் கருதி, இந்த பகுதிகளுக்கு நல்ல நிலையிலுள்ள பேருந்துகளை இயக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.