உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நிபந்தனைகளை மீறியது ஏன்? வக்கீல்களுக்கு ஐகோர்ட் கேள்வி

நிபந்தனைகளை மீறியது ஏன்? வக்கீல்களுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை, 'துாய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது கைதான, வழக்கறிஞர்களை விடுவித்த உத்தரவில், விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறியது ஏன்' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 'துாய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில், சட்டக் கல்லுாரி மாணவர்கள், வழக்கறிஞர்கள் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர். அவர்களை சட்ட விரோதமாக கைது செய்துள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும்' என, வழக்கறிஞர் விஜய் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள், சட்டக் கல்லுாரி மாணவர்களை, உடனே விடுவிக்க உத்தரவிட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, செய்தியாளர் சந்திப்போ, நேர்காணலோ அல்லது எந்த விதமான அறிக்கையோ அளிக்க கூடாது என, நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவை மீறி, வழக்கறிஞர் பாரதி, செய்தியாளர்களை சந்தித்துள்ளார். வழக்கறிஞர்களே நீதிமன்ற உத்தரவை மீறி உள்ளனர், என்றார். அப்போது, 'நீதிமன்ற உத்தரவை மீறியது ஏன்' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் ப.பா.மோகன், ராதாகிருஷ்ணன் ஆஜராகி, வழக்கு குறித்து மட்டுமே பாரதி பேட்டி அளித்தார். நீதிமன்ற உத்தரவை மீறவில்லை. கைது செய்யப்பட்ட, பெண் வழக்கறிஞர்களை காவல்துறையினர் துன்புறுத்தி உள்ளனர். கைது செய்தவர்களின் மொபைல் போன்களை கைப்பற்றி வைத்து உள்ளனர், என்றனர். இதை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பாக மனு தாக்கல் செய்ய, மனுதாரருக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்து, இடைக்கால உத்தரவை நீட்டித்தனர். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி