ரூ.10 கோடி ஏலச்சீட்டு மோசடி வழக்கு புகார்தாரர்களை கண்டு பெண் ஓட்டம்
திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு ஒன்றியம் கன்னிகாம்பாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் மனைவி சரஸ்வதி, 40. இவர், தன் உறவினர் பிரகாஷ் என்பவருடன் ஏலச்சீட்டு நடத்தி வந்தார்.மேலும் 'திருத்தணி, திருப்பதி, திருவள்ளூர் மற்றும் ரேணிகுண்டா பகுதிகளில், வீட்டுமனைகள் வாங்கி தருகிறேன்' என, தவணை முறையில், 100க்கும் மேற்பட்டோரிடம் 10 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்.பாதிக்கப்பட்டோர், திருவள்ளூர் எஸ்.பி., அலுவலகத்தில், கடந்த மாதம் 22ம் தேதி புகார் அளித்தனர்.இந்நிலையில் பணத்தை இழந்த பெண்கள், ஆண்கள் என, 50க்கும் மேற்பட்டோர், நேற்று காலை 10:00 மணிக்கு திருத்தணி டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்தனர். விசாரணைக்காக சரஸ்வதியையும் போலீசார் வரவழைத்தனர்.ஆனால் சரஸ்வதி, அங்கிருந்த கூட்டத்தை பார்த்து, பயத்தில் மின்சார ரயில் ஏறி தப்பிச் சென்றார்.இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், சரஸ்வதியை கைது செய்து பணத்தை மீட்டு தரவேண்டும் என, கோஷம் எழுப்பினர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை அடுத்து அனைவரும் கலைந்தனர்.