உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கூடுதல் நல அலுவலர் இல்லாததால் 5 மண்டலங்களில் பணிகள் பாதிப்பு

கூடுதல் நல அலுவலர் இல்லாததால் 5 மண்டலங்களில் பணிகள் பாதிப்பு

அடையாறு, தெற்கு வட்டாரத்தில், கூடுதல் மாநகர நல அலுவலர் பணியிடம் காலியாக உள்ளதால், பொறுப்பு அதிகாரி மொத்த பணிகளையும் சேர்த்து பார்க்க முடியாமல் திணறுகிறார். இதனால், ஐந்து மண்டலங்களில் சுகாதார பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார துணை கமிஷனர் அலுவலகத்தின் கீழ், வளசரவாக்கம், ஆலந்துார், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய மண்டலங்கள் உள்ளன. இங்கு, கூடுதல் மாநகர நல அலுவலர் பணியிடம் உள்ளது. ஆறு மாதங்களாக இந்த பணியிடம் காலியாக உள்ளது. இதனால், அடையாறு மண்டல சுகாதார அதிகாரி, கூடுதல் பொறுப்பாக கூடுதல் மாநகர நல அலுவலர் பணியையும் சேர்த்து பார்க்கிறார். இதனால், அடையாறு மண்டலத்தில் கவனம் செலுத்த முடியாமல் திணறுகிறார். இதன் காரணமாக, கள ஆய்வு, கொசு ஒழிப்பு போன்ற சுகாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, மண்டல கூட்டங்களில் பங்கேற்கவில்லை. மேலும், ஐந்து மண்டலங்களில் உள்ள மொத்த பணிகள், ஆய்வு கூட்டங்கள், அறிக்கைகள் வழங்க முடியாமல் சோர்வடைகிறார். இதனால், காரணமே இல்லாமல், அனைவரிடமும் கோபமாக பேசுவதாகவும், அவரின் நடவடிக்கையால் சுகாதார பணிகளை தீவிரமாக செய்ய முடியவில்லை எனவும், அதிகாரிகள் புலம்புகின்றனர். எனவே, காலி பணியிடத்தை நிரப்பி, தொய்வில்லாமல் சுகாதார பணிகள் மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை