மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
பொன்னேரி: இறால் பண்ணையில் பணிபுரிந்த வடமாநில தொழிலாளி, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். அசாம் மாநிலம், கர்பி அங்கலாங் பகுதியைச் சேர்ந்தவர் பிரோபின் கோகய், 38. இவர், பொன்னேரி அடுத்த காட்டூர் பகுதியில் உள்ள இறால் பண்ணையில், இரண்டு மாதங்களாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, இறால் பண்ணையில் உள்ள மின் சாதனத்தை இயக்கும்போது, மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார்; சக தொழிலாளர்கள் அவரை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு, மருத்துவ பரிசோதனையில் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இது குறித்து, காட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.