விரைவு ரயிலில் மயங்கி கிடந்த இளம்பெண்
சென்னை, விரைவு ரயிலில் மயங்கி கிடந்த இளம்பெண்ணை, ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டனர்.எழும்பூரில் இருந்து, நேற்று முன்தினம் இரவு 9:40 மணிக்கு மதுரைக்கு புறப்பட்டு 'பாண்டியன்' விரைவு ரயில், தாம்பரம் ரயில் நிலையத்தை கடந்த சிறிது நேரத்தில், 'ஸ்லீப்பர்' பெட்டியில் 24 வயது பெண் மயங்கி விழுந்து கிடக்கிறார் என, ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது.அந்த ரயிலில் பயணம் செய்த, ரயில்வே டாக்டர் ஜெகதீசனை வரவழைத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என, மருத்துவர் தெரிவிக்க, ரயில் இரவு 10:32 மணிக்கு செங்கல்பட்டு நிலையம் வந்தவுடன், அங்கு தயாராக இருந்த மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின், மருத்துவமனையில் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று வீடு திரும்பினார்.