மாணவியின் கழுத்தை அறுத்து இளைஞர் தற்கொலை முயற்சி
பல்லாவரம், பல்லாவரத்தில், மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்த இளைஞர், அதே கத்தியால் தன் கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம், 23. பெயின்டர். இவர், பெயின்ட் அடிக்கும் வேலைக்கு சென்ற போது, தாம்பரம் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும், ஒன்பதாம் வகுப்பு படிக்கும், 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்ற வினோத்தை, சிறுமியின் பெற்றோர், சகோதரி ஆகியோர் கண்டித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த வினோத், மறைத்து வைத்திருந்த கத்தியால் சிறுமியின் கழுத்தை அறுத்து, தன் கழுத்தையும் அறுத்துக்கொண்டு, வீட்டின் வெளியே சாலையில் மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்த அப்பகுதியினர், இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலத்த காயமடைந்த வினோத், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து, பல்லாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.