உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதன்மை கல்வி அலுவலருக்கு மூன்று பதவிகள் :பணிப்பளுவால் பாதிப்பு வருமா?

முதன்மை கல்வி அலுவலருக்கு மூன்று பதவிகள் :பணிப்பளுவால் பாதிப்பு வருமா?

கோவை :அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் (சி.இ.ஓ.) ஓய்வு பெற்றதையடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரே (ரெகுலர்) இப்பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார். இதன் மூலம் மாவட்ட ரெகுலர் சி.இ.ஓ., அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் சி.இ.ஓ., அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகிய மூன்று பொறுப்புகளை கவனிக்க வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.கோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் (எஸ்.எஸ்.ஏ.,) கூடுதல் முதன்மை கல்வி அலுவலராக கலைவாணி பதவி வகித்து வந்தார். இவர் கடந்த செப்.30ம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் ஆசிரியர் பயிற்றுனர்கள், கண்காணிப்பாளர்கள், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கலைவாணி ஓய்வு பெற்றதையடுத்து, அவரது பொறுப்புகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி கூடுதலாக கவனித்து வருகிறார். அனைவருக்கும் கல்வி இயக்கத்தை பொறுத்தவரையில், திருப்பூர் மற்றும் கோவை ஆகிய இரு மாவட்டங்களுக்கும் கோவை மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் ஒருவர் மட்டுமே கவனித்து வரும் நிலை உள்ளது. தற்போது எஸ்.எஸ்.ஏ., கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் ஓய்வு பெற்று விட்ட நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்திக்கு வேலைப்பளு அதிகரித்துள்ளது.எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் திருப்பூர், கோவை மாவட்டங்களில் பள்ளி வகுப்பறைகள், மதில் சுவர் கட்டுவது, மாற்றுத்திறனாளி பயிற்சி, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு காசோலை வழங்குவது உள்ளிட்ட ஒவ்வொன்றுக்கும் சி.இ.ஓ.,தான் கையெழுத்திட்டாக வேண்டும். தாமதம் ஏற்படும் பட்சத்தில் திட்டப் பணிகளிலும், பள்ளி ஆய்வுகளிலும் தொய்வு ஏற்படும். ஏற்கனவே அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பு வகிக்கும் சி.இ.ஓ., ஆனந்தி, இனி எப்படி மூன்று பதவிகளையும் கவனிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.திருப்பூர் மாவட்டத்துக்கு புதிய சி.இ.ஓ., நியமிக்கப்படுவது வரை அம்மாவட்டத்தின் சி.இ.ஓ., பொறுப்பு, இரு மாவட்ட எஸ்.எஸ்.ஏ.,வின் கூடுதல் சி.இ.ஓ., கோவை மாவட்ட ரெகுலர் சி.இ.ஓ., அனைவருக்கும் இடைநிலைக் கல்வியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகிய நான்கு பதவிகளை இவர் ஒருவரே திறமையாக சமாளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ