இந்திய வீரர்கள் அனைவரும் முன்னிலை
கோவை:ஐ.எம்., நார்ம்ஸ் குளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த மூவர் உட்பட இந்திய வீரர்கள் அனைவரும் முன்னிலை வகித்து வருகின்றனர்.தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் சார்பில், 26வது ஐ.எம்., நார்ம்ஸ் குளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டி, அலங்கார் ஹோட்டலில் கடந்த, 30ம் தேதி முதல் கடந்த, 5ம் தேதி வரை நடந்தது.இதில், நம் நாட்டை சேர்ந்த ஆறு பேர், ரஷ்யா, ஸ்லோவாகியா, உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் என, 10 பேர் பங்கேற்றனர்.ஒன்பது சுற்றின் முடிவில், இந்தியாவின் பார்கன்கர் அக் ஷய், 7 புள்ளிகளுடன் வெற்றி பெற்றார். தொடர்ந்து, 27வது ஐ.எம்., நார்ம்ஸ் குளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டி, அதே ஹோட்டலில் கடந்த, 7ம் தேதி தொடங்கி வரும், 13ம் தேதி வரை நடக்கிறது. இப்போட்டியில், பெலாரஸ் நாட்டின் எவ்ஜெனி பொடோல்சென்கோ, ஸ்லோவாகியாவின் மாணிக் மிகுலாஸ், உஸ்பெகிஸ்தானை சேர்ந்த வாகிடோவ் டாயிர், துர்க்மெனிஸ்தானின் அன்னகெல்டுவேய் ஓராஸ்லி, ரஷ்யாவின் கோசெலாக் ஷ்வி டேவிட் மற்றும் இந்தியாவை சேர்ந்த ஹர்ஷித் பவார் (டில்லி), ஆதர்ஷ் உப்பாலா (தெலுங்கானா), தமிழ்நாட்டை சேர்ந்த தினேஷ் ராஜன், நந்தீஷ், சர்வேஸ்வரன் என, 10 பேர் பங்கேற்றுள்ளனர்.தமிழ்நாடு மாநில சதுரங்க சங்க தலைவர் மாணிக்கம், போட்டிகளை தொடங்கி வைத்தார். கர்நாடக சர்வதேச நடுவர் மஞ்சுநாதா, துணை நடுவர் ராஜ்சந்தோஸ் ஆகியோர் போட்டிகளை நடத்தி வருகின்றனர்.முதல் சுற்று போட்டியில், உஸ்பெகிஸ்தானை சேர்ந்த வாகிடோவ் டாயிர், ரஷ்யாவின் கோசெலாக் ஷ்வி டேவிட்டை வென்று, 1 புள்ளி பெற்றுள்ளார்.தமிழ்நாட்டை சேர்ந்த தினேஷ் ராஜன், துர்க்மெனிஸ்தானின் அன்னகெல்டுவேய் ஓராஸ்லியை வென்று, 1 புள்ளியும், தமிழ்நாட்டை சேர்ந்த நந்தீஷ், சர்வேஸ்வரனை வென்று, 1 புள்ளியும் பெற்றனர்.ஸ்லோவாகியாவின் மாணிக் மிகுலாஸ் மற்றும் ஹர்ஷித் பவார்(டில்லி) இடையேயான போட்டி சமனில் முடிந்தது. இருவரும் தலா, 0.5 புள்ளி பெற்றனர். ஆதர்ஷ் உப்பாலா (தெலுங்கானா) மற்றும் பெலாரஸ் நாட்டின், எவ்ஜெனி பொடோல்சென்கோ இடையேயான போட்டியும் சமனில் முடிந்தது. இருவரும் தலா, 0.5 புள்ளி பெற்றனர். தொடர்ந்து, போட்டிகள் நடந்து வருகின்றன.