பீர் பாட்டிலால் தாக்குதல் : தனியார் பஸ் நடத்துனர் கைது
மேட்டுப்பாளையம்:டாஸ்மாக் பாரில், இளைஞரை பீர் பாட்டிலால் தலையில் தாக்கிய தனியார் பஸ் நடத்துனரை, காரமடை போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம் காரமடை ரங்கா நகரை சேர்ந்தவர் நந்தகுமார், 33. இவர் தனியார் கல்லூரியில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மாமா மகன் நவீன்குமார். இவர் தோலம்பாளையம் டாஸ்மாக் பாருக்கு மது அருந்த சென்றார். அங்கு அதே பகுதியை சேர்ந்த கலையரசனுக்கும், இவருக்கு மது போதையில் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, பாரில் இருந்து, நந்தகுமாருக்கு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு நந்தகுமார் வந்து பார்த்த போது, கலையரசன் பீர் பாட்டிலை எடுத்து, நவீன்குமார் தலையில் ஓங்கி அடித்தார். பின், நந்தகுமார் மற்றும் பார் ஊழியர்கள் கலையரசனை தடுத்த நிலையில், அவர் நந்தகுமாரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். பின், அங்கிருந்து தப்பி ஓடினார்.இந்நிலையில் பீர் பாட்டிலால் தாக்கப்பட்ட நவீன்குமாரை, நந்தகுமார் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.இதுகுறித்து, நந்தகுமார் அளித்த புகாரின் பேரில் காரமடை போலீசார் வழக்கு பதிந்து கலையரசனை கைது செய்தனர். கலையரசன் தனியார் பஸ்ஸில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார்.---