பிரம்ம தீர்த்தம் கிணறு காணிக்கை; உதவி கமிஷனர் அறிக்கை சமர்பிப்பு
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதசுவாமி கிணற்று நீர் துார்வாரி காணிக்கை எடுத்தது தொடர்பாக, கோவை மாவட்ட ஹிந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தார்.காரமடை அரங்கநாதசுவாமி கோவிலில் பிரம்ம தீர்த்தம் கிணறு உள்ளது. கிணற்று நீர், துார்வாரும் பணி கடந்த 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடந்தது. இதில் எடுக்கப்பட்ட காணிக்கைகள் 70 மூட்டைகள், 9 பெட்டிகளில் வைக்கப்பட்டது. ஹிந்து அறநிலையத்துறை உயரதிகாரிகள், கோவில் அறங்காவலர் குழுவினர், மிராசுதாரர்கள் முன்னிலையில், கிணறு துார்வாரும் பணி நடக்கவில்லை. கோவில் செயல் அலுவலர் சந்திரமதி, கணக்கர் மகேந்திரன் ஆகியோர் தனிச்சையாக இதை செய்துள்ளனர் என புகார் எழுந்தது.இதையடுத்து, நேற்று முன் தினம் கோவை மாவட்ட ஹிந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திரா, காரமடை அரங்கநாத சுவாமி கோவிலுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின் கோவில் செயல் அலுவலர் சந்திரமதியிடம் விசாரணை மேற்கொண்டார்.ஹிந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திரா கூறுகையில், ''கிணறு துார்வாரப்பட்டு காணிக்கை எடுத்த விவகாரம் தொடர்பாக உயர் அதிகாரி உத்தரவின் பேரில் கோவிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டேன். கிணறு துார்வாரி காணிக்கைகள் எடுப்பதை ஹிந்து அறநிலையத்துறை உயர் அதிகாரிகள், அறங்காவலர்கள் ஆகியோர் முன்னிலையில் தான் செய்ய வேண்டும். ஆனால் கோவில் செயல் அலுவலர் ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. இதுதொடர்பாக விசாரணை அறிக்கையை உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளேன்,'' என்றார்.---