| ADDED : ஜூன் 30, 2024 02:13 AM
கோவை;கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட, 37 வேட்பாளர்களும், தங்களது தேர்தல் செலவு கணக்கை நேற்று சமர்ப்பித்தனர். அவற்றை தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஒத்திசைவு செய்தனர்.கோவை தொகுதிக்கான செலவின பார்வையாளர்கள் கீது படோலியா, உம்மே பர்டினா அடில் ஆகியோர் முன்னிலையில், பொதுமக்கள் குறைகேட்கும் அரங்கில் ஆய்வு செய்யப்பட்டது. பொள்ளாச்சி தொகுதிக்கு முதல் தளத்தில் உள்ள மினி கூட்டரங்கில், தேர்தல் பார்வையாளர்கள் ஆஷிஷ்குமார், ஷிவ் பிரதாப் சிங் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும், தேர்தல் கணக்கு தாக்கல் செய்தனர்.வேட்பாளர்கள் தாக்கல் செய்த செலவு கணக்கை, தேர்தல் பிரிவினர் கண்காணித்து, பதிவு செய்யப்பட்ட கணக்குடன் ஒத்திசைவு செய்து பார்த்தனர். இன்னும் இரு நாட்களுக்குள் செலவு கணக்கு விபரங்கள், தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியிடப்படும் என, தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.
கோவை லோக்சபா தொகுதியில், 37 வேட்பாளர்கள், பொள்ளாச்சி தொகுதியில், 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிகபட்சமாக, 95 லட்சம் ரூபாய் செலவிட வேண்டும். மூன்று முறை தேர்தல் செலவின கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதை கண்காணிக்க, மூன்று சட்டசபை தொகுதிக்கு ஒருவர் வீதம், ஒரு லோக்சபா தொகுதிக்கு இரண்டு செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.