குளிர்பானங்களில் சுகாதாரம் உறுதிப்படுத்த கோரிக்கை
பொள்ளாச்சி; கலப்படமில்லாத சுத்தமான மூலப்பொருட்களை கொண்டு குளிர்பானங்கள் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்பதை உறுதிபடுத்த கோரிக்கை எழுந்துள்ளது.பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இதனால், உணவகங்கள், பேக்கரிகள், தள்ளுவண்டி கடைகளில், குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறு விற்பனை அதிகரித்துள்ளது.சிலர், தற்காலிக கடை அமைப்பதுடன், உணவு பாதுகாப்புச்சட்டப்படி, உரிமம் மற்றும் பதிவுச் சான்று பெறாமலும் குளிர்பானங்கள் விற்கின்றனர். சில கடைகளில், சுத்தமான தண்ணீரைக் கொண்டு, கூழ், மோர் மற்றும் பழரசம் தயாரிப்பதில்லை எனவும் புகார் தெரிவிக்கப்படுகிறது.எனவே, கலப்படமில்லாத சுத்தமான மூலப்பொருட்களை கொண்டு குளிர்பானங்கள் தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.மக்கள் கூறுகையில், 'பல கடைகளில் விற்கப்படும் பழச்சாறுகள் சுகாதாரமற்ற தண்ணீரில் தயாரிக்கப்படுகிறது. தரமற்ற பழச்சாறு விற்பனை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.