கோவை;சென்னையில் நடந்த மாநில அளவிலான யூத் தடகளப்போட்டியில், தர்மசாஸ்தா பள்ளி மாணவி இரண்டு பதக்கங்கள் வென்று அசத்தினார். தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 5வது தமிழ்நாடு மாநில யூத் தடகள சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டிகள், சென்னை தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலையில் நடந்தன. 100மீ., 200மீ., 400மீ., 800மீ., நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி ஏறிதல், நடையோட்டம், மும்முறை தாண்டுதல், போல் வால்ட், ரிலே உள்ளிட்ட தடகளப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர். கோவை மாவட்டம் சார்பில், ஸ்ரீ தர்மசாஸ்தா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் பிருந்தா என்ற மாணவி உயரம் தாண்டுதல் மற்றும் ஹெப்டத்லான் ஆகிய போட்டிகளில் பங்கேற்றார்.18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் இறுதிப்போட்டியில், 1.64மீ., தாண்டி பிருந்தா தங்கமும், ஹெப்டத்லான் போட்டியில் 3994 புள்ளிகள் எடுத்து வெள்ளிப்பதக்கமும் வென்றார். இதன்மூலம் சத்தீஸ்கரில் நடக்கவுள்ள, தேசிய தடகளப்போட்டிக்கு பிருந்தா தகுதி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவியை, தர்மசாஸ்தா பள்ளி தாளாளர் பாலசுப்ரமணியம், துணை தலைவர் சங்கரநாராயணன், செயலாளர் சந்தோஷ், துணை செயலாளர் பிள்ளை, பொருளாளர் ரவிக்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.