புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி மீண்டும் துவக்கம் தினமலர் செய்தி எதிரொலி
வால்பாறை, : 'தினமலர்' செய்தி எதிரொலியால், புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி மீண்டும் துவங்கியது.வால்பாறை நகருக்கு 8 கி.மீ., தொலைவில் உள்ள அக்காமலை செக் டேமிலிருந்து, குழாய் வாயிலாக தண்ணீர் குடிநீர் தொட்டியில் தேக்கி வைத்த பின், வீடு மற்றும் கடைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.வால்பாறை நகரில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாட்டால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.பழைய குடிநீர் குழாய் அடிக்கடி பழுதடைந்த நிலையில் காணப்படுவதால், நகரில் குடிநீர் தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை.இதனிடையே குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், அக்காமலை செக் டேமிலிருந்து வால்பாறை நகர் வரை பழைய குடிநீர் குழாய்களை மாற்றி புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி கடந்த ஆண்டு துவங்கப்பட்டது.ஆனால் பணி ஆமை வேகத்தில் நடப்பதாலும், குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழிகள் பல்வேறு இடங்களில் மூடப்படாமல் உள்ளதாலும் எஸ்டேட் தொழிலாளர்களும், வாகன ஓட்டுநர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.இது குறித்த செய்தி 'தினமலர்' நாளிதழில் நேற்று முன் தினம் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து, வால்பாறை நகராட்சி கமிஷனர் ரகுராமன் உத்தரவின் பேரில், குடிநீர் குழாய் பதிக்கும் பணி மீண்டும் துவங்கியது.
பணிகள் தாமதம் ஏன்?
புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. ஆனால் கருமலையிலிருந்து பச்சமலை, நடுமலை வழியாக வால்பாறை நகருக்கு வரும் வழியில் சில இடங்களில் பாறைகள் உள்ளதாலும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாலும் தான் பணி தாமதமானது.ஒரிரு மாதத்தில் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி நிறைவடையும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.