உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கவனமாக இருந்தால் ஷாக் அடிக்காது! பொறியாளர்கள் கூறும் பாதுகாப்பு அம்சங்கள் இதோ

கவனமாக இருந்தால் ஷாக் அடிக்காது! பொறியாளர்கள் கூறும் பாதுகாப்பு அம்சங்கள் இதோ

கோவை:'அடுக்குமாடி மற்றும் குடியிருப்பு பகுதிகளில், மழை காலத்தில் மட்டுமல்லாமல் எக்காலத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால், அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கலாம்' என, கட்டுமான பொறியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.கோவை சின்னவேடம்பட்டி அருகேயுள்ள குடியிருப்பில் உள்ள பூங்காவில், விளையாடிக் கொண்டிருந்த போது, மின்சாரம் தாக்கி இரு குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுப்பது குறித்து, கட்டுமான பொறியாளர் சங்க(கொசினா) முன்னாள் தலைவர் கணேஷ் கூறியதாவது:கட்டுமான வேலை நடக்கும் போது, தற்காலிக மின் இணைப்பு பெற்று பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில்,வழக்கமான மின்சார ஒயர்களை தவிர்த்து, கேபிள் எனப்படும் யு.ஜி., கேபிள்களை பயன்படுத்த வேண்டும்.டைல்ஸ் மெஷின் பிரேக்கர், கட்டிங் மெஷின், ட்ரில்லர்ஸ் பயன்படுத்தும் போது அடிக்கடி ஜங்ஷன் பாக்ஸ் மாற்ற வேண்டும். ஏனெனில், அவற்றை பயன்படுத்தும் போது, விரைவில் பழுதடைந்து கலவை உள்ளே நுழைந்து உடைந்து விடும்.கட்டுமானப் பணியில், உபகரணங்களை மாடிக்கு கொண்டு செல்லும் வகையில், 'மினி லிப்ட்' வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கும். இந்த இணைப்புக்கான பேனல் போர்டுகளை, மூடாமல் வைத்திருப்பர்.சில சமயங்களில் ஒயர் பழுதாகியிருக்கலாம். இதன் இணைப்புகளை, 'வாட்டர் புரூப்பிங் டேப்' கொண்டு கவர் செய்து, பாதுகாக்க வேண்டும். மிக முக்கியமாக, மின்கசிவு ஏற்பட்டால், இ.எல்.சி.பி., (earth leakage circuit breaker) எனப்படும் மின்கசிவு தடுப்பான கருவியை நிச்சயம் பொருத்த வேண்டும்.கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் சூப்பர்வைசர்கள் அல்லது எலக்ட்ரீசியன் அல்லது மேஸ்திரியிடம் சொல்லி, வாரம் ஒரு முறை இத்தகைய மின்சார ஒயர்களை பரிசோதிக்க செய்து, பழுதாகி இருந்தால் மாற்றி விட வேண்டும்.மழை காலங்களில் மட்டுமல்லாமல், க்யூரிங் செய்யும் போதும், ஈரப்பதம் இருந்து கொண்டிருக்கும். தண்ணீர் தேங்கியிருக்கும் இதுபோன்ற சமயங்களில், பாதுகாப்பை நிச்சயமாக உறுதி செய்ய வேண்டும். கட்டுமானப் பணியின் போது, இப்பகுதிகளில் குழந்தைகளை விளையாட அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு, அவர் கூறினார்.

இவர்கள் மிக முக்கியம்

கொசீனா முன்னாள் தலைவர் பாலமுருகன் கூறியதாவது:அடுக்குமாடி குடியிருப்புகளில் கட்டுமானப் பணிகளின் போது, குறிப்பிட்ட ஒரு எலக்ட்ரீஷியன் மற்றும் பிளம்பர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பர். இவர்களுக்கு தான், ஆரம்ப நிலையிலேயே, எந்தெந்த பகுதியில் இணைப்பு இருக்கிறது, எங்கே அவுட் லெட் செல்கிறது என்று முழு விபரமும் தெரியவரும். கட்டுமானப் பணிகள் முடிந்த பின்னும், பராமரிப்பு பணிக்காக, இவர்களை பயன்படுத்திக் கொள்வது தான் நல்லது. மாதத்துக்கு ஒரு பிளம்பர், எலக்ட்ரீஷியன் என மாற்றிக் கொண்டிருந்தால், இணைப்புகள் எங்கே இருக்கிறது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தெரியாது.இவர்களுக்கு மாத சம்பளம் அளித்து நியமிக்கலாம். இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்தும் போது, அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ