ஐ.டி.ஐ., பயிற்சியாளர் சேர்க்கை செப். 30 வரை நீட்டிப்பு
பெ.நா.பாளையம்:கோவை அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.,) பயிற்சியாளர்கள் சேர்க்கை, செப்., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள அரசினர் தொழில் பயிற்சி நிலையம், கோவை மகளிர் அரசினர் தொழில் பயிற்சி நிலையம், ஆனைகட்டி அரசினர் தொழில் பயிற்சி நிலையம் (பழங்குடியினர்) ஆகியவற்றில், நடப்பு கல்வியாண்டுக்கான பயிற்சியாளர்களின் நேரடி சேர்க்கை செப்., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை அரசினர் தொழில் பயிற்சி மையத்தில் டர்னர், மெக்கானிக், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட ஆறு மாதம், ஓராண்டு மற்றும் இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படுகிறது.தொழில் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி சேர்க்கை நடக்கிறது. இதற்கான பயிற்சி கட்டணம் இலவசம். அனைத்து பயிற்சியாளர்களுக்கும், இலவச லேப்டாப், சைக்கிள், பஸ் பாஸ், சீருடைகள், காலணிகள் மற்றும் வரைபடக் கருவிகள் அரசால் இலவசமாக வழங்கப்படும். தொழில் பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும், வளாக நேர்காணல் வாயிலாக தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்று தரப்படும். மேலும், விவரங்களுக்கு, 0422 2642041, 80727 37402 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.