ஆன்லைனில் போதை மாத்திரை சப்ளை ஹரியானாவை சேர்ந்தவர் கைது 19,500 போதை மாத்திரைகள் பறிமுதல்
கோவை;தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு, ஆன்லைன் வாயிலாக போதை மாத்திரை சப்ளை செய்த நபரை, கோவை போலீசார் கைது செய்தனர். சமீபகாலமாக கோவை மாநகர பகுதியில் கஞ்சா, போதை மாத்திரை மற்றும் குட்கா புழக்கம் அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த, மாநகர போலீசார் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்வோர், பயன்படுத்துவோரை கைது செய்து வருகின்றனர். கடந்த ஆக., மாதம் வரை, 797 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 19 குற்றவாளிகள், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 188 கிலோ கஞ்சா, 2598 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.போதை மாத்திரை பயன்படுத்தி, கைதான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், சிலர் பெங்களூருவில் இருந்து வாங்கியதாகவும், பலர் ஆன்லைன் வாயிலாக ஹரியானாவில் இருந்து வாங்கியதாகவும் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக, போலீசார் ஆன்லைன் வாயிலாக போதை மாத்திரை சப்ளை செய்யும் நபர் குறித்து விசாரித்தனர். அப்போது, ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சச்சின் கர்க், 41 என்பவர் 'துலீப் பார்மா' என்ற பெயரில் மாத்திரைகள் சப்ளை செய்யும் நிறுவனம் நடத்தி வருவது தெரியவந்தது. அந்நிறுவனம் மூலம் போலியான ஜி.எஸ்.டி., எண் கொண்டு, வலி நிவாரணி மாத்திரைகளை, போதைக்காக விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து கோவை போலீசார் ஹரியானா மாநிலம் சென்று, சச்சின் கர்க்கை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 19,500 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அவரை ஹரியானா மாநிலத்தில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை கொண்டு வந்து சிறையில் அடைத்தனர்.
'ரூ.6க்கு மாத்திரை வாங்கி
ரூ.300க்கு விற்பனை'கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ''பழைய வழக்குகளில் கைதானவர்களிடம் விசாரித்ததில், பெரும்பாலானோர், சச்சினிடம் இருந்து மாத்திரை வாங்கியதாக தெரிவித்தனர். சச்சினிடம் ஒரு மாத்திரை ரூ.6க்கு வாங்கி, இங்கு ரூ. 300க்கு விற்பனை செய்து வந்துள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு, மாத்திரைகளை ஆன்லைன் ஷாப்பிங் தளம் வாயிலாக சப்ளை செய்து வந்துள்ளார். அவரை கைது செய்ய அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், ஹரியானா சென்று இரண்டு நாட்கள் அவரை பின்தொடர்ந்து, கைது செய்து அழைத்து வந்துள்ளனர்,'' என்றார்.