தபால் ஏ.டி.எம்., சேவை பாதிப்பு நிறுவனம் -- ஊழியர்கள் லடாய்
கோவை,:தபால் நிலைய ஏ.டி.எம்., சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.தபால் நிலையங்களில் ஏ.டி.எம்., வசதி உள்ளது. அதில் பணம் நிரப்புவது, நிர்வகிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம், சில பிரச்னைகளால், இந்த சேவையை சில நாட்களாக நிறுத்தியுள்ளது. இதனால் ஏ.டி.எம்.,கள் தற்காலிகமாக செயல்படவில்லை. இதற்கான அறிவிப்பு தபால் ஏ.டி.எம்., கதவில் ஒட்டப்பட்டுள்ளது.தபால் துறை நிதி சேவைகள் பிரிவு இயக்குநர் மூனா யாஸ்மின், இந்தியன் போஸ்டல் பேங்கிங் பேமெண்ட் வங்கி முதன்மை அலுவலர் உட்பட பலருக்கு இதுகுறித்து சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளார்.குறிப்பிட்ட தனியார் நிறுவனத்துக்கு, கடந்தாண்டு டிச., வரை 9 மாதங்களில் 165 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதால், பணப்பற்றாக்குறை அதிகரித்து, சில நாட்களுக்கு முன் அதன் இயக்குநர்கள் நால்வர் ராஜினாமா செய்துள்ளனர். பண நெருக்கடியால், வங்கி கடன்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளத்தை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், சில நாட்களாக தபால் ஏ.டி.எம்.,மில் ஊழியர்கள் பணம் செலுத்தவில்லை.தபால் துறையைச் சேர்ந்த சிலர் கூறுகையில், 'தபால் ஏ.டி.எம்., சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தபால் ஏ.டி.எம்., கொண்டு மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கலாம். இப்பிரச்னை விரைவில் நிவர்த்தியாகும். புதிய நிறுவனத்தினரை இப்பணிக்கு நியமிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.