உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேயிலையில் கொப்பள நோய் தாக்குதலால் உற்பத்தி பாதிப்பு 

தேயிலையில் கொப்பள நோய் தாக்குதலால் உற்பத்தி பாதிப்பு 

வால்பாறை: வால்பாறையில் தேயிலையில் பரவும் கொப்பள நோயால், செடிகள் துளிர்விட முடியாத நிலையில், உற்பத்தி பாதித்துள்ளது.வால்பாறையில், தேயிலை தொழில் முக்கிய தொழிலாளாக உள்ளது. இங்குள்ள, 40க்கும் மேற்பட்ட தேயிலை எஸ்டேட்களில், 32,825 ஏக்கரில் தேயிலை, காபி, ஏலம், மிளகு பயிரிடப்பட்டுள்ளன. இதில், 25 ஆயிரம் ஏக்கரில் தேயிலை மட்டும் பயிரிடப்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக, தென்மேற்குப் பருவமழை பெய்த நிலையில், தேயிலை செடிகள் துளிர்விட முடியாமல், உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக, மழைப்பொழிவு முற்றிலுமாக குறைந்து, வெயில் நிலவும் நிலையில், தேயிலை செடிகள் துளிர்விட துவங்கியுள்ளன. ஆனால், பெரும்பாலான எஸ்டேட்களில் தேயிலை செடிகளில், கொப்பள நோய் பாதித்த நிலையில், செடிகளின் மேல்பகுதி கருகி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.தோட்ட அதிகாரிகள் கூறியதாவது:சூரிய ஒளி குறைவு, பனி மூட்டம் போன்றவைகளாலும், 12 மணி நேரத்திற்கு மேல் தேயிலை செடி மீது ஈரப்பதம் இருப்பதாலும் தான் கொப்பள நோய் பரவுகிறது. தேயிலை செடிகளின் இடையே வைக்கப்பட்டுள்ள மரக்கிளைகளை அகற்றி, வெயில் படச்செய்தால், கொப்பள நோயை கட்டுப்படுத்தலாம். கொப்பள நோயில் இருந்து தேயிலை செடிகளை பாதுகாக்க உபாசி தேயிலை ஆராய்ச்சியாளர்கள் அறிவுரையின் படி பூச்சி மருந்து தெளிக்கப்படுகின்றன.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ