உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிங்கை குளத்தில் கழிவு நீர் கலப்புக்கு விமோசனம்: பணிகளை முடித்து விரைவில் சோதனை ஓட்டம்

சிங்கை குளத்தில் கழிவு நீர் கலப்புக்கு விமோசனம்: பணிகளை முடித்து விரைவில் சோதனை ஓட்டம்

கோவை;சிங்காநல்லுார் குளக்கரையில், 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட எஸ்.டி.பி., அமைக்கும் பணி இன்னும், 20 நாட்களில் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்படவுள்ளது.கோவை மாவட்டத்தில் சங்கிலித்தொடர் போன்று, 24 குளங்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இதில், கிருஷ்ணம்பதி, செல்வம்பதி, உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், சிங்காநல்லுார் குளம் உட்பட ஒன்பது குளங்களை மாநகராட்சி பராமரித்து வருகிறது.தற்போது, கழிவுநீர் என்பது சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தாக மாறிவிட்டது. செல்வம்பதியில் ஆரம்பித்து கிருஷ்ணாம்பதி, முத்தண்ணன் குளம் என, சிங்காநல்லுார் குளம் வரை மழை நீரோடு கழிவு நீர் நேரடியாக கலக்கிறது. இக்குளம், 250 ஏக்கர் பரப்பளவு கொண்டது.கரும்புக்கடை சாரமேடு வழியாக ராஜவாய்க்கால், திருச்சி ரோட்டை கடக்கும் சங்கனுார் கிளை வாய்க்கால்கள் வழியாக இக்குளத்துக்கு தண்ணீர் செல்கிறது. கழிவு நீரால், துர்நாற்றம், நிலத்தடி நீர் மட்டம் மற்றும் உயிரினங்கள் பாதிப்பு போன்ற சூழல் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட்டுவருகின்றன.கழிவுநீர் கலப்பதை தடுக்க, திருச்சி ரோட்டை ஒட்டிய குளக்கரையில், ரூ.4.5 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்(எஸ்.டி.பி.,) அமைக்கும் பணி கடந்தாண்டு ஜூன் மாதம் துவங்கியது. பணிகளை ஓராண்டுக்குள் முடிக்கும் வகையில் பணிகள் நடந்துவந்த நிலையில் விரைவில் பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் நடத்தப்படவுள்ளது.

சோதனை ஓட்டம்!

மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,'திருச்சி ரோட்டை ஒட்டிய குளக்கரையில், 45 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலத்தில், ரூ.4.5 கோடி மதிப்பீட்டில் எஸ்.டி.பி., அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ரோட்டை ஒட்டிய சங்கனுார் வாய்க்கால் தண்ணீருடன், குளத்தையொட்டிய குடியிருப்பு பகுதி வழியாக வரும் கழிவுநீரும் இங்கு சுத்திகரிக்கப்பட்டு குளத்தில்வெளியேற்றப்படும். இன்னும், 20 நாட்களில் பணிகளை முடித்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட பின் முழு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்