ரோடு சந்திப்பு மேம்பாட்டு பணி; மறுநடவு செய்யப்படும் 17 மரங்கள்
ஆனைமலை : ஆனைமலை அருகே, மரங்களுக்கு மறுவாழ்வு திட்டத்தின் கீழ், 17 மரங்கள் மாற்று இடத்தில் நடவு செய்யப்பட்டன.ஆனைமலை அருகே, நா.மூ., சுங்கத்தில் இருந்து உடுமலை செல்லும் ரோட்டில் போக்குவரத்துக்கு வசதியாக ரோடு அகலப்படுத்தி, சிறு பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்றன.தொடர்ந்து, துறையூர் மேடு சந்திப்பு பகுதியை மேம்படுத்தும் பணி, இரண்டு கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு இடையூறாக உள்ள மரங்களை வெட்டி அகற்ற வேண்டிய சூழல் இருந்தது.அதற்கு மாற்றாக, மரங்களை மறுநடவு செய்வதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பசுமைக்குழு மரங்கள் மறு வாழ்வு அமைப்பினர் ஆலோசனை நடத்தினர்.இதற்காக அதிகாரிகள், தன்னார்வ அமைப்பினர் உதவியுடன் மரங்கள் மறுநடவு செய்யும் பணி நேற்று நடந்தது. மரங்கள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டு, மாற்று இடத்தில் நடவு செய்யப்பட்டன.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:விபத்துகள் அதிகம் நடைபெறும் சந்திப்பு பகுதிகளை கண்டறிந்து, மேம்படுத்தும் பணிகள் நடக்கின்றன. அதன் ஒரு பகுதியாக, துறையூர் மேட்டில் இருந்து இருபுறமும், தலா 200 மீட்டர் துாரத்துக்கு ரோடு அகலப்படுத்தி தடுப்புகள் அமைக்கப்படுகிறது.இப்பணிக்காக, 17 மரங்கள் வேரோடு எடுத்து மறுநடவு செய்யப்பட உள்ளது. முதற்கட்டமாக, வேம்பு, பூவரசன், புங்கை உள்ளிட்ட மரங்கள் மாற்று இடத்தில் மறு நடவு செய்யும் பணி நடக்கிறது.இவ்வாறு, கூறினர்.