விவசாயிகளுக்கான தனி அடையாள அட்டை: அரசு இ-சேவை மையங்களில் இலவச பதிவு
மேட்டுப்பாளையம்: அரசு இ-சேவை மையங்களில், விவசாயிகளுக்கான தனி அடையாள அட்டை எண் பெற, விவசாயிகள் இலவசமாக பதிவு செய்யலாம் என கோவை மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குநர் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெறுவதற்கு தங்களது நிலஉடைமை விவரங்கள், பயிர்சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதில் ஏற்படும் காலதாமதத்தினை தவிர்க்கும் வகையிலும், அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன் பெற ஏதுவாகவும், அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரித்திட தமிழகத்தில் வேளாண் அடுக்குத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.தற்போது, விவசாயிகளின் பதிவு விவரங்களுடன், ஆதார் எண், தொலைபேசி எண், நிலஉடைமை விவரங்களை இணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.2025--26ம் நிதி ஆண்டு முதல், பிரதம மந்திரி கவுரவ நிதித் திட்டம், பயிர்க்காப்பீடுத் திட்டம் போன்ற மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களில் விவசாயிகள் எளிதில் பயன்பெற, தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியம்.எனவே, விவசாயிகள் தங்களது கிராமங்களில், அரசு இ- சேவை மையங்களுக்கு நேரடியாகச் சென்று தங்கள் நிலஉடைமை விவரங்கள், ஆதார் எண், தொலைபேசி எண் ஆகிய விவரங்களை அளித்து எவ்வித கட்டணமுமின்றி வரும் 31ம் தேதிக்குள் பதிவு செய்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.-----------