கோவை, : ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு ஊதியம் எவ்வளவு வழங்க வேண்டும் என்கிற பட்டியலை, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை (ஏப்., 19) நடக்கிறது. கோவை லோக்சபா தொகுதியில், 2,059 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. பதிவாகும் ஓட்டுகள், ஜூன் 4ல் ஜி.சி.டி., கல்லுாரியில் எண்ணப்படும். அக்கல்லுாரி வளாகத்தில் தரைத்தளத்தில், மூன்று சட்டசபை தொகுதிகளுக்கும், முதல் தளத்தில் மூன்று சட்டசபை தொகுதிகளுக்கும், ஓட்டு எண்ணும் அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அக்கட்டடம் முழுவதும் 'சிசி டிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு அறையில் போலீசார் இருந்தவாறு கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லுார், சூலுார் சட்டசபை தொகுதிகளுக்கு தலா, 14 டேபிள்கள், கவுண்டம்பாளையம் மற்றும் பல்லடம் சட்டசபை தொகுதிகள் பெரியவை என்பதால், 18 டேபிள்கள் போடுவதற்கு, திட்டமிடப்பட்டு உள்ளது. 'ஸ்ட்ராங் ரூமில்' இருந்து இயந்திரங்களை எடுத்து வருவதற்கும், ஓட்டுக்களை எண்ணுவதற்கும் எத்தனை ஊழியர்கள் தேவை என கணக்கிடப்பட்டுள்ளது.ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கையன்று, தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் ஒவ்வொருவருக்கும், தேர்தல் ஆணையம் ஊதியம் நிர்ணயித்து, கோவை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்பி வைத்துள்ளது. இதன்படி, ஊதியம் வழங்கி அதற்கான பட்டியலை, ஓட்டு எண்ணிக்கை முடிந்த ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எவ்வளவு சம்பளம்?
ஓட்டுச்சாவடியில் பணிபுரியும் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் - ரூ.1,700, ஓட்டுச்சாவடி அலுவலர், 1,2,3,4 - ரூ.1,300, உதவியாளர் - ரூ.700. ஓட்டு எண்ணிக்கை மேற்பார்வையாளர் - ரூ.850, உதவியாளர் ரூ.650, அலுவலக உதவியாளர் - ரூ.350, மைக்ரோ அப்சர்வர் - ஓட்டுப்பதிவு அன்று ரூ.1,000, ஓட்டு எண்ணிக்கை அன்று - ரூ.450, மண்டல அலுவலர்கள் ரூ.1,500, உதவி மண்டல அலுவலர்கள் ரூ.1,000, வரவேற்பு அலுவலர், காசாளர், வி.ஏ.ஓ.,க்கள் - ரூ.800, கிராம உதவியாளர், அலுவலக உதவியாளர்கள் மற்றும் பிற அலுவலர்களுக்கு - ரூ.700 வீதம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.