கோவை;கோவை புத்தகத் திருவிழா வரும் 19ம் தேதி துவங்கி, 28ம் தேதி வரை நடக்கிறது.இதுகுறித்து, கலெக்டர் கிராந்திகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:கோவை மாவட்ட நிர்வாகம், கொடிசியா சார்பில், 8வது ஆண்டாக கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா வரும் 19ம் தேதி துவங்கி, 28ம் தேதி வரை நடக்கிறது. நாடு முழுக்க இருந்து பங்கேற்பாளர்கள் 285 அரங்குகள் அமைக்கின்றனர்.அனைத்து வயதினருக்குமான நிகழ்வுகள், படைப்புகள் இடம்பெறுகின்றன. கடந்த ஆண்டு 2 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடந்தது. இம்முறை அதிகம் நடக்கும் என எதிர்பார்க்கிறோம்.கடந்த ஆண்டு, சிறைக்கைதிகளுக்காக புத்தக தான இயக்கம் நடந்தது. இதில், 2,000க்கும் அதிகமான புத்தகங்கள் பெறப்பட்டன. இம்முறையும் புத்தக தானம் பெறப்பட்டு, பல்வேறு அரசு விடுதிகளுக்கு வழங்கப்படும்.பள்ளி மாணவர்கள் தினமும் பங்கேற்கும் வகையில், அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தல், புதிய புத்தகங்கள் வெளியீடு, கருத்தரங்குகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் பல்வேறு போட்டிகள், கதைசொல்லல், நாடகம், பட்டிமன்றம், சொற்போர் உள்ளிட்ட இலக்கிய நிகழ்வுகள், நடைபெறவுள்ளன. நுழைவுக்கட்டணம் இல்லை.இளம் தலைமுறையினர், சிறார்கள் உட்பட அனைத்து வயதினரும் பயன் பெறும் வகையில் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவில், அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்.புத்தக திருவிழா தலைவர் ரமேஷ், கொடிசியா தலைவர் கார்த்திகேயன், மாவட்ட நூலக அலுவலர் ராஜேந்திரன், தொழிலதிபர் வரதராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
படைப்பாளர்களுக்கு விருது
புத்தகத் திருவிழாவில், இளம் படைப்பாளர்களுக்கான விருது இரா.பூபாலன் (கவிதை), நா.கோகிலன் (புனைவு) ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. கொடிசியா சார்பில், மானுடவியல் ஆய்வாளர் பக்தவத்சல பாரதிக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது ரூ.1.5 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழைக் கொண்டதாகும்.