உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / துார்வாரப்படாத மழை நீர் ஓடை; தொற்றுநோய் பரவும் அபாயம்

துார்வாரப்படாத மழை நீர் ஓடை; தொற்றுநோய் பரவும் அபாயம்

துார்வார வேண்டும்

மழைநீர் செல்லும் உடுமலை தங்கம்மாள் ஓடை துார்வாரப்படாமல் உள்ளது. இதனால், அப்பகுதி முழுவதும் கொசு உற்பத்தியாகி நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சியினர் ஓடையை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மோகன்குமார், உடுமலை.

அடையாளம் இல்லை

உடுமலை, நேரு வீதி எக்ஸ்டென்சன் பிரிவில், பாதாள சாக்கடை குழிகள் அடையாளம் இல்லாமல் இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். மேலும், பாதசாரிகளும் அவ்வழியாக செல்லும்போது தடுமாறி கீழே விழுகின்றனர். நான்கு சக்கர வாகனங்களும் அடிக்கடி அக்குழிகளில் சிக்கிக்கொள்கின்றன.- குருநாதன், உடுமலை.

வாகனங்கள் ஆக்கிரமிப்பு

உடுமலை, கல்பனா ரோட்டில் வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. மற்ற கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மகேஸ்வரி, உடுமலை.

விதிமீறும் வாகனங்கள்

உடுமலை - பழநி ரோட்டில், தேசிய நெடுஞ்சாலையோரம் வாகனங்கள் விதிமுறை மீறி நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே, விதிமுறை மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கண்ணன், உடுமலை.

தெருவிளக்குகள் எரிவதில்லை

உடுமலை, ஆசாத் வீதியில் தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் சென்று வருவதற்கு சிரமப்படுகின்றனர். திருட்டு பயமும் அதிகம் இருப்பதால் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.- ஜெயகுமார், உடுமலை.

சுகாதாரம் பாதிப்பு

உடுமலை, பசுபதி வீதியில் குப்பைக்கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படுவதில்லை. நான்கு நாட்கள் ஆனாலும் கழிவுகள் அப்புறப்படுத்தப்படுவதில்லை. வீடுகளின் முன் வைக்கப்படும் கழிவுகளை தெருநாய்கள் சிதறடிக்கின்றன.- ரவி, உடுமலை.

ரோட்டில் குழி

பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் ரவுண்டானா அருகே தனியார் வங்கி முன் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் பலர் நிலை தடுமாறி செல்கின்றனர். இரவு நேரத்தில் இங்கு பள்ளம் இருப்பது தெரியாமல், வாகனத்தில் செல்வோர் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். இதை நகராட்சி நிர்வாகம் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- -டேவிட், பொள்ளாச்சி.

ஒளிராத தெருவிளக்கு

பொள்ளாச்சி - கோவை ரோடு, சி.டி.சி., மேடு, வடுகபாளையம் செல்லும் ரோட்டில் அண்ணா நகர் பகுதி வரை பல நாட்களாக தெருவிளக்குகள் எரியாமல் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அவ்வழியில் செல்லும் பயணியர் பலர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இங்கு உள்ள தெருவிளக்குகளை சரி செய்ய வேண்டும்.- -ஈஸ்வரன், பொள்ளாச்சி.

உபயோகப்படுத்தாத தொட்டி

கிணத்துக்கடவு, பெரியார் நகர் முதல் தெருவில் உள்ள தண்ணீர் தொட்டி, கடந்த சில மாதங்களாக உபயோகம் இல்லாமல், குழாய்கள் சேதமடையும் நிலையில் உள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் சீரமைப்பு பணி மேற்கொண்டு, தொட்டியை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.-- -விஜய், கிணத்துக்கடவு.

குரங்கு தொல்லை

வால்பாறை நகரில், பல இடங்களில் சிங்கவால் குரங்குகள் உணவு தேடி அலைமோதுகின்றன. இதனால், மக்கள் பலர் பாதிக்கப்படுவதுடன் அச்சத்துடன் ரோட்டில் பயணிக்கின்றனர். இதை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- -ஷகீலா, வால்பாறை.

கடைவீதியில் நெரிசல்

பொள்ளாச்சி கடைவீதி, கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் ரோடு, எஸ்.எஸ்.,கோவில் வீதி, இமாம்கான் வீதியில், இருசக்கர வாகனங்களை ரோட்டில் தாறுமாறாக நிறுத்துவதால், மற்ற வாகனங்கள் செல்வதற்கும், நடந்து செல்வோருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. வாகனங்கள் நிறுத்துவதை ஒழுங்குபடுத்த வேண்டும்.-- அசோக், பொள்ளாச்சி.

ரோட்டில் 'பார்க்கிங்'

பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில் இருந்து, மகாலிங்கபுரம் செல்லும் ரோட்டில் கடைகள் முன்பாக அதிகளவு வாகனங்கள் ரோட்டின் ஒரு பகுதியில் 'பார்க்கிங்' செய்யப்பட்டுள்ளது. இதனால், அவ்வழியில் செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை போக்குவரத்து போலீசார் கவனித்து சரி செய்ய வேண்டும்.-- -மணிகண்டன், பொள்ளாச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை