உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி துவங்கியது

மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி துவங்கியது

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் தாலுகாவில் 23 ஆயிரத்து 500 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நேற்று துவங்கியது. தொடர்ந்து 21 நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது.கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமம் மற்றும் குக்கிராமங்களில் தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ் 2024ம் ஆண்டிற்கான கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது. இதன் ஒருபகுதியாக, மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் தடுப்பூசி போடும் பணி நேற்று துவங்கியது.இதுகுறித்து காரமடை கால்நடை மருந்தகம், உதவி மருத்துவர் சுலோச்சனா கூறுகையில், ஒவ்வொரு கிராமங்களுக்கும் நேரடியாக சென்று மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசி போடாவிட்டால் கோமாரி நோய் மாடுகளை தாக்க வாய்ப்புள்ளது. இந்நோயினால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும், கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலைத் திறன் குறைவு, கறவை மாடுகளில் சினை பிடிப்பு தடைபடுவது போன்ற பாதிப்புகள் ஏற்படலாம், என்றார்.இதுகுறித்து கால்நடை பராமரிப்பு துறை, கோவை மண்டல இணை இயக்குனர் திருமுருகன் கூறுகையில், கோவை மாவட்டத்தில் 114 குழு அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது. ஒரு குழுவில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு ஆய்வாளர், ஒரு பராமரிப்பாளர் இருப்பார்கள். கிராமப்புறங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளிடம் முன்பே தடுப்பூசி போடப்பட உள்ள இடம் அறிவிக்கப்பட்டு, அதன் வாயிலாக விவசாயிகளுக்கு அறிவிப்புகள் தெரிவிக்கப்பட்டு, தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி போட்ட உடன், இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டு, கால்நடை உரிமையாளரிடம் ஓ.டி.பி. பெறப்படும். கோவை மாவட்டத்தில் 2.33 லட்சம் கால்நடைகள் உள்ளன. 2.75 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி