| ADDED : ஏப் 17, 2024 01:56 AM
கோவை;தமிழக செய்தி - மக்கள் தொடர்பு துறை சார்பில், தேர்தல் விழிப்புணர்வு குறித்து தொகுக்கப்பட்ட குறும்படங்கள் அடங்கிய குறுந்தகட்டினை, கோவை கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் நேற்று வெளியிட்டார்.பொள்ளாச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான, டி.ஆர்.ஓ., ஷர்மிளா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்வேதா, உதவி கலெக்டர் (பயிற்சி) ஆஷிக் அலி, மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் சந்திரா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சுரேஷ், குமரேசன், செய்தி - மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா உட்பட பலர் பங்கேற்றனர். இதன்பின், 2019 தேர்தலில், 65 சதவீதத்துக்கு கீழ் ஓட்டுப்பதிவான கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, 213 ஓட்டுச்சாவடிகளை சேர்ந்த பொதுமக்களிடம், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, 'தேர்தல் திருவிழா' அழைப்பிதழ் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.ஒண்டிப்புதுாரில் உள்ள ஆர்.சி.பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் விளம்பர பதாகை ஏந்தி, விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். கவுண்டம்பாளையம் துடியலுார் சந்தைக்கு வந்த மக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகிக்கப்பட்டது. தொண்டாமுத்துார் பகுதியில் குறைவாக ஓட்டுப்பதிவான பகுதியில் உள்ள வீடுகளில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, நோட்டீஸ் ஒட்டப்பட்டது.