18 வயது நிறைவடைந்தவர்கள்... ஒருவரை கூட விட்டு வைக்காதீங்க! தேர்தல் பிரிவுக்கு கலெக்டர் அறிவுரை
கோவை; வரும் புத்தாண்டு துவக்கத்தில், 18 வயது நிறைவடைய உள்ள ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் ஒருவரை கூட விட்டு வைக்க வேண்டாம், அனைவரையும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறச்செய்யவேண்டும், என்று கலெக்டர், தேர்தல் பணி மேற்கொள்ளும் ஒவ்வொரு பணியாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.கோவை கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியீடு செய்யப்பட்டது. இதில் சுருக்கமுறைத்திருத்தம் மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தியிருந்தார். அதன் அடிப்படையில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகே உள்ள ஓட்டுச்சாவடிகளில் நாம் சுருக்கத் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.வரைவு வாக்காளர் பட்டியலில் சுருக்கமுறை திருத்தம் செய்ய நவ., 16, 17. 23, 24 ஆகிய நான்கு நாட்கள் சிறப்பு முகாம்கள் கோவையிலுள்ள பத்து சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் நடத்தப்படுகிறது. காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடக்கும் சிறப்பு முகாம்களில் பங்கேற்கலாம். இதில் பங்கேற்று வாக்காளர்கள் தகுந்த படிவங்களில் விண்ணப்பிக்கலாம். கோவையில், 15,43,073 ஆண்கள், 16,05,516 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள், 650 பேர் என மொத்தம், 31,49,239 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், பெயர், வயது உள்ளிட்டவைகளில் திருத்தம் செய்ய விண்ணப்பங்கள் பெறவும், வாக்காளர்கள் நவ., 28 வரை விண்ணப்பங்களை நாம் ஏற்கனவே ஓட்டுக்களை செலுத்திய ஓட்டுச்சாவடிகளில் நேரில் மனுக்களை அளிக்கலாம்.2025 -ஆம் ஆண்டு ஜன.,1 தேதியில் 18 வயதினைப் பூர்த்தி செய்பவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரினை புதியதாக இணைத்துக்கொள்ளலாம்.வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்யவும், மற்றும் பெயர்கள் நீக்கம் செய்ய வேண்டுபவர்கள் தகுந்த படிவங்களின் மூலமாகவும், voters.eci.gov.inஎன்ற இணையதளம் மூலமாகவும், Voter Helpline என்ற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க படிவம்- 6ம், பெயர் நீக்கம் செய்ய படிவம் -7ம், திருத்தம் செய்யவும், ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள் புதிய குடியிருப்பு முகவரி மாற்றம் செய்ய படிவம் -8 யும், வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்க படிவம்- 6B யையும், பயன்படுத்தலாம்.
'அலட்சியம், கவனக்குறைவு கூடாது'
இது குறித்து கலெக்டர் கிராந்தி குமார் கூறியதாவது: 18 வயது நிரம்பிய நிரம்ப உள்ளவர்கள் புதிய வாக்காளர்களை இணைக்கும் முயற்சியில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஒவ்வொருவரும் இறங்க வேண்டும்.வருவாய் துறை பணியாளர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும்.புதிய இளம் வாக்காளர்கள் ஒருவர் கூட விடுபடக் கூடாது. வரும் புத்தாண்டில் 18 வயது நிறைவடைய உள்ளவர்கள் ஒவ்வொருவரையும் விசாரித்து இணைக்க வேண்டும்.இன்றைய இளைஞர்களால் தான் சிறப்பான எதிர்காலத்தை கொடுக்க முடியும். அதனால் அவர்களுக்குள் ஓட்டுரிமையை பெற்றுத்தர வேண்டியது அரசுப் பணியாளர்களாகிய நம் கைகளில் உள்ளது. அதற்கான பணியை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.அதே சமயம் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல், உள்ளிட்ட பணிகளை சரியாகவும் துல்லியமாகவும் மேற்கொள்ள வேண்டும். அலட்சியமோ, கவனக்குறைவோ ஏற்படக்கூடாது, என பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.