ரேஸ்கோர்ஸ் சாலையில் பட்டுப்போன 29 மரங்கள் வெட்டி அகற்றம்
கோவை; கோவை ரேஸ்கோர்ஸ் சுற்றுவட்ட சாலையில், பட்டுப்போன, 29 மரங்களை, வருவாய்த்துறை அனுமதி பெற்று, மாநகராட்சி நிர்வாகம் வெட்டி வருகிறது.கோவை ரேஸ்கோர்ஸ் சுற்றுவட்டச்சாலை வழித்தடத்தில் சில மரங்கள் பட்டுப்போய் உள்ளன. நடைபயிற்சி மேற்கொள்வோர் மீது விழுந்து, அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், அவற்றை வெட்டி அகற்ற, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.இதையடுத்து மொத்தம், 29 மரங்கள் பட்டுப்போயிருந்ததுதெரியவந்தது. பட்டுப்போன மரங்களை பட்டியலிட்டு, வெட்டுவதற்கு முறையான அனுமதி கோரி, வடக்கு தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.புலியகுளம் வி.ஏ.ஓ., மற்றும் அனுப்பர்பாளையம் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் நேரில் சென்று தணிக்கை செய்து, வடக்கு தாசில்தாருக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். மழை மற்றும் காற்றினால் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாய நிலையில் இருப்பதால், குற்றவியல் நடைமுறை சட்டம்-133ன் கீழ், மாநகராட்சி நிர்வாகம் அகற்றிக் கொள்ள, தெற்கு தாசில்தார் மணிவேல் உத்தரவிட்டார். மரங்களை வெட்டும்போது, புலியகுளம் வி.ஏ.ஓ., மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் உடனிருந்து கண்காணித்து, அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, பட்டுப்போன அம்மரங்கள் வெட்டும் பணி நேற்று நடந்தது.