700 மருந்தாளுநர் பணியிடங்கள் காலி; மருந்துகளை பாதுகாக்க குளிர்சாதன வசதி தேவை
கோவை: மாநில சுகாதாரத்துறையின் கீழ், 700 மருந்தாளுநர்கள் பணியிடம் ஆண்டுக்கணக்கில் காலியாக வுள்ளதால், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்தில், அரசு மருத்துவக்கல்லுாரியுடன் இணைந்த அரசு மருத்துவமனைகள் 62, அரசு பல் மருத்துவக்கல்லுாரி மருத்துவனை 2, மாவட்ட தலைமை மருத்துவமனைகள் 18, வட்டம் மற்றும் வட்டம் சாராத பிற அரசு மருத்துவமனைகள் 272, ஆரம்ப சுகாதார நிலையங்கள் 1800 உள்ளிட்ட மருத்துவனைகளில், 4,500 மருந்தாளுநர் பணியிடங்கள் உள்ளன. இங்கு ஓய்வு பெறும் மருந்தாளுநர்கள் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. தற்போது நிலவரப்படி 700 இடங்கள் காலியாகவுள்ளன. இதனால் மருந்துகள் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதால், நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர். தமிழ்நாடு அரசு மருத்துவமனை அனைத்து மருந்தாளுநர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் கூறுகையில், '' காலியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாததால், போதுமான மருந்தாளுநர்கள் இன்றி, மருந்து வினியோக பணிகளில் சிரமம் ஏற்படுகிறது.மேலும், பல இடங்களில் மருந்து சேமிப்பு கிடங்குகள் தகர கொட்டகைகளில் தான் செயல்படுகிறது. சில மருந்துகள் 25 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வைக்கவேண்டும். குளிர்பதன வசதி தமிழக அரசு மருத்துவமனைகளில் இல்லை. இச்சிக்கலில் அரசு நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும், '' என்றார். சங்க மாநில செயலாளர் வளவன் கூறுகையில், ''அரசு மருத்துவமனைகளில் மருந்துகளை உரிய வெப்பநிலையில் பாதுகாக்க குளிர்பதன வசதியுடன் கூடிய மருந்து சேமிப்பு பண்டகங்கள், மருந்தகம் அமைத்து தரவும், காலியிடங்களை தொகுப்பூதிய அடிப்படையில் எடுக்காமல், நிரந்தர பணியாளர்களாக சேர்க்க வேண்டும் எனஅரசுக்கு மனு அளித்துள்ளோம், '' என்றார்.