உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கள்ளில் கலக்க கடத்தப்பட்ட 7,500 லி., எரிசாராயம் சிக்கியது

கள்ளில் கலக்க கடத்தப்பட்ட 7,500 லி., எரிசாராயம் சிக்கியது

கோவை; கள்ளில் கலப்பதற்காக கடத்தி செல்லப்பட்ட, 7,500 லிட்டர் எரிசாராயத்தை, கோவை மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். சாராயம் கடத்தி வந்த இருவரை, கைது செய்து விசாரிக்கின்றனர். கோவை மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் எரிசாராயம் கடத்தல், பதுக்கல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் மீது, நடவடிக்கை எடுத்த தீவிரம் காட்டி வருகின்றனர். ரகசிய தகவல்களின் அடிப்படையில், அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சில வாரங்களுக்கு முன் சூலுார் பகுதியில், ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5,145 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர்.அதன் தொடர்ச்சியாக, கோவை மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கிருஷ்ணகிரி, ஒசூர் தர்கா அருகில் வந்த லாரியை, சோதனை செய்தனர். அதில், 215 கேனில் 7,525 லிட்டர் எரிசாராயம் இருந்தது. வாகனத்தை ஓட்டி வந்த இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், கர்நாடகா மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம், பாலக்காடு பகுதிக்கு கடத்தி செல்வதும், எரிசாராயத்தை கள்ளில் கலக்க பயன்படுத்துவதாகவும் தெரிவித்தனர். கடத்தலில் தொடர்புடைய மேலும் சிலரை, போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ