மேலும் செய்திகள்
ஓராண்டில் 18 ஆயிரம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு
08-Aug-2025
கோவை; கோவை அரசு மருத்துவமனையில், ஜன., முதல் ஜூலை வரை, 9,738 பேருக்கு நாய்க்கடிக்காக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 பேர், 'ரேபிஸ்' நோய் தாக்கி, சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றைய தினம், நாய்க்கடி விவகாரம் நாடு தழுவிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து நாய்களையும் பிடித்து, காப்பகத்தில் அடைப்பது இயலாத காரியம். ஏனெனில், கோவை நகரில் மட்டும், 1.11 லட்சம் தெருநாய்கள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி நியமித்துள்ள தொண்டு நிறுவனங்கள் மூலமாக பிடிக்கப்பட்டு, கருத்தடை சிகிச்சை செய்யப்படுகிறது. இருப்பினும், அதன் பெருக்கத்தை இன்னும் குறைக்க முடியவில்லை. நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு செல்வோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில், ஏழு மாதங்களில் வெளிநோயாளிகளாக 8,902 பேரும், உள்நோயாளிகளாக 836 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர். 9 பேர் ரேபீஸ் அறிகுறியுடன் சிகிச்சை பெறுகின்றனர்.
கோவை அரசு மருத்துவமனை டீன் கீதாஞ்சலி கூறுகையில், ''வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். நாய் கடித்தால், அப்பகுதியில் தண்ணீரை ஊற்றி, சோப்பு போட்டு, 10 நிமிடங்கள் நன்கு கழுவ வேண்டும். சின்ன கடி, கீறல் என அலட்சியமாக விடுவதே, ரேபீஸ் பாதிப்பால் இறப்பு வரை செல்கிறது. சாதாரண கீறலில், நாய் நக்கினால் கூட தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. நாய் கடித்தால், உடனடியாக ரேபீஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
08-Aug-2025