டெங்கு காய்ச்சலை ஒழிக்க நடவடிக்கை
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க, பேரூராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டுகளிலும், டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும், ஏ.டி.எஸ்., கொசுக்களை ஒழிக்க, பல்வேறு கட்ட நடவடிக்கைகளை பேரூராட்சி சுகாதார பிரிவு ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக, 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி சுகாதார அலுவலர் பரமசிவம் கூறுகையில், ''தினமும் சுகாதார துறை சார்பில், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை குறித்தும், அவர்களின் முகவரி குறித்தும் விசாரணை நடத்தி, பேரூராட்சி நிர்வாகத்தின் சுகாதார துறை சார்பில் பதிவு செய்யப்படுகிறது. பின்னர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்கள் வசிக்கும், குடியிருப்பு பகுதியில் கூடுதல் கவனத்துடன் காய்ச்சல் ஒழிப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.குறிப்பிட்ட பகுதியில் உள்ள வீடுகளை சுற்றியும் தண்ணீர் தேங்கி உள்ளதா என்பது குறித்து கண்காணித்து, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், திறந்த நிலையில் தொட்டிகளில் உள்ள நல்ல தண்ணீர் அகற்றப்படுகிறது.மூடிய நிலையில் உள்ள தொட்டிகளில் கொசுக்கள் வராமல் தடுக்க, 'அபேட்' மருந்து தெளிக்கப்படுகிறது. மேலும், டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க, பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கருத்துக்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள், அப்பகுதி மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன'' என்றார்.