அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 20ம் தேதி முதல் அட்மிஷன் துவக்கம்
வால்பாறை; அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், வரும், 20ம் தேதி முதல் நேரடி மாணவர் சேர்க்கை நடக்கிறது.வால்பாறையில், கடந்த 2022ம் ஆண்டு முதல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் செயல்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை 'ஆன்லைன்' வாயிலாக நடக்கிறது. எட்டாம்வகுப்பு, பத்தாம்வகுப்பு தேர்ச்சி பெற்ற, 14 முதல், 40 வயது வரை உள்ளவர்கள், விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.பிட்டர், எலக்ட்ரீசியன், பேஷன் டிசைன், டெக்ஸ்டைல்ஸ், மெக்கட்ரானிக்ஸ் ஆகிய படிப்புக்கு நேரிலும், 'ஆன்லைன்' வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேர்ந்த பின் மாணவர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகையாக, 750 ரூபாய் வழங்கப்படும். இலவச பஸ் பாஸ், விலையில்லா லேப்டாப், விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படும். பயிற்சி முடிந்த பின் வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்படும். அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு தமிழ்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் தோறும், ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.மொத்தம் உள்ள, 104 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. சேர விரும்பும் மாணவ, மாணவியர், ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். வரும் 20ம் தேதி முதல், 27ம் தேதி வரை தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி அட்மிஷன் நடக்கிறது. அப்போது, பள்ளி மாற்று சான்றிதழ், ஆதார் உள்ளிட்ட விபரங்களை நேரில் கொண்டு வர வேண்டும். இத்தகவலை, தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் நடராஜ் தெரிவித்தார்.