உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின்கம்பத்தில் விளம்பர பதாகை; மின் ஊழியர்களுக்கு சிரமம்!

மின்கம்பத்தில் விளம்பர பதாகை; மின் ஊழியர்களுக்கு சிரமம்!

விளம்பரங்களால் தொல்லை

பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் பகுதியில் ஆங்காங்கே மின் கம்பங்களில் தனியார் விளம்பர பதாகைகள் தொங்கவிடப்பட்டுள்ளது. மின்கம்பங்களில் ஏதேனும் பிரச்னை ஏற்படும் போது, அந்த சமயத்தில் கம்பத்தில் ஏற மின் பணியாளர்களுக்கு சிரமமாக உள்ளது. எனவே, இதைத் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- சரண்யா, பொள்ளாச்சி.

அறுந்து கிடக்கும் மின் ஒயர்

கிணத்துக்கடவிலிருந்து கொண்டம்பட்டி செல்லும் ரோட்டில் தனியார் கம்பெனி அருகே உள்ள மின்கம்பத்தில், மின் ஒயர்கள் அறுந்து கீழே தொங்கியபடி ரோட்டோரத்தில் உள்ளது. இதனால், மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த மின் ஒயர்களை விரைவில் சீரமைக்க வேண்டும்.-- ரவி, கிணத்துக்கடவு.

ரோட்டோரத்தில் குப்பை

பொள்ளாச்சி, மாக்கினாம்பட்டி, ராஜகணபதி நகர் செல்லும் ரோட்டின் ஓரத்தில் அதிக அளவு பிளாஸ்டிக் குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுவதுடன், துர்நாற்றம் வீசுகிறது. இதை அப்பகுதி தூய்மை பணியாளர்கள் கவனித்து உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும்.-- செல்வராஜ், பொள்ளாச்சி.

ரோடு சேதம்

கிணத்துக்கடவிலிருந்து பகவதிபாளையம் செல்லும் வழியில் உள்ள தனியார் கல்லூரி முன்பாக, ரோடு சேதமடைந்து குழி ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் தடுமாறி செல்கின்றனர். எனவே வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, ரோட்டை விரைவில் சரி செய்ய வேண்டும்.- சண்முகம், கிணத்துக்கடவு.

உருக்குலைந்த ஓடுதளம்

பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டினுள் நுழைவுவாயில் முதல், அனைத்து பகுதியிலும் ஓடுதளம் உருக்குலைந்து உள்ளது. குண்டும் குழியாக இருப்பதால், பஸ் பயணியர் தடுமாறி விழுகின்றனர். நகராட்சி நிர்வாகம் சார்பில், ஓடுதளத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும்.- காயத்ரி, பொள்ளாச்சி.

வாகனங்களில் 'ஓவர் லோடு'

வால்பாறையில் இருந்து, பொள்ளாச்சி செல்லும் வாகனங்களில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி மலைப்பாதையில் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இது தவிர்க்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- விகாஸ், வால்பாறை.

ரோட்டில் ஆக்கிரமிப்பு

உடுமலை அருகே சீனிவாசா வீதியில் ரோட்டோரத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் வாகனங்களை நிறுத்த முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்கள் நடந்துசெல்வதற்கும் இடையூறு ஏற்படுகிறது. வாகனங்களை விதிமுறை மீறி நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராகவன், உடுமலை.

திறந்தவெளி கழிப்பிடம்

உடுமலை, மினி மார்க்கெட் பகுதியில் சுகாதாரமில்லாமல் திறந்தவெளி கழிப்பிடமாக மாறி வருகிறது. இதனால் அப்பகுதியில் மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் அவ்வழியாக சென்றுவருவதற்கும் முடியாமல் முகம் சுழிக்கின்றனர். மேலும், சாக்கடை கால்வாயில் குப்பைக்கழிவுகள் கொட்டப்படுவதால் கொசுத் தொல்லையும் அதிகரிக்கிறது.-திவாகர், உடுமலை.

மழைநீர் தேக்கம்

உடுமலை அருகே சிந்து நகரில் மழைநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மழைநீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- குமார், உடுமலை.

பயணியர் பாதிப்பு

உடுமலை, தாராபுரம் ரோடு சங்கர் நகர் நிழற்கூரை சிதிலமடைந்துள்ளது. அதை பயன்படுத்தும் பயணியருக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. இதனால் அவர்கள் திறந்த வெளியில் நின்று காத்திருக்கின்றனர். மழை காலத்தில் அவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.- வேலுச்சாமி, உடுமலை.

சுகாதாரம் பாதிப்பு

உடுமலை தளி ரோடு போடிபட்டியில், குப்பை அதிக அளவில் குவிந்துள்ளது. இதனால், அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, குப்பையை அகற்ற ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கண்ணன், உடுமலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை